வெள்ளி, 27 மார்ச், 2020

அஞ்சுதல் ஒழிக (17.06.1925)– தந்தை பெரியார்


அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கதர் அணிய அஞ்சுவதைப் பற்றி ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் “நெஞ்சு பொறுக்குதிலையே" என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள அரிய கட்டுரையை மற்றொரு பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். மற்றவர்களைவிட உத்தியோகஸ்தர்களே இராட் டையை ஆதரிக்கப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏழை எளிய வர்கள் உள்படப் பொது ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்து தான் இவர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆகவே, ஏழை எளியவர்களுக்கு உணவளித்துக் காக்க வல்லதான இராட்டையை ஆதரித்தல் இவர்கள் கடனன்றோ? ஸ்ரீமான் ஆச்சாரியார் எடுத்துக்காட்டுகின்ற வண்ணம் இவர்கள் கதரணிய பயப்படுபவதற்குச் சிறிதும் ஆதாரமில்லை . ஆதாரம் ஓரளவு இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், ஆடை அணியும் விஷயத்தில்கூட நமது சுதந்திரத்தைப் பறிகொடுத்தல் பேதமையேயாகும். உத்தியோகஸ்தர்கள் அஞ்சி அஞ்சிச் சாவதொழிந்து தமது கடனாற்ற முன்வருவார்களாக.
(குடிஅரசு - நுணைத் தலையங்கம் - 17.06.1925)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக