புதன், 25 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 64:-


கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தடை!

(1949 ஆண்டு இந்திய அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த போது பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். ஒரு முற்போக்காளர்களுக்குப் பிரச்சினை வந்தால் பிற முற்கோக்காளர்கள் உதவுவது அவசியமே ஆகும். அதே போலப் பாசிசம் போன்ற பொதுப் பிரச்சினையில் நாம் ஒன்றுகூடி அதனை எதிர்க்க வேண்டும். அப்போது தான் எதிரியை பலத்துடன் எதிர்த்து சாய்க்க முடியும்.)

தந்தை பெரியார்:-
““பொதுமக்களிடமிருந்து தங்களுக்குஎவ்வித அனுதாபமோ, ஆதரவோ கிடைக்காதென்பதைக் கண்ட கம்யூனிஸ்ட்டுகள், வேறு வழியின்றித் தற்போது குழப்பம் உண்டுபண்ணவும், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும் முயல்கின்றனர்.” இது நமது சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட்கட்சியைச் சட்டவிரோதமானதென்று, ஏன் தடைவிதித்தோம் என்பதை விளக்கி மாகாண சர்க்கார் கொடுத்திருக்கும் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டு.

இந்தக் காரணத்தைக் கூறிச் சென்னை மாகாணத்திலுள்ள பல வகையான 19 தொழிலாளர் சங்கங்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தில் அவைகள் இருக்கின்றன என்பதாக அவைகள் எல்லாவற்றையும் சர்க்கார் தடைப்படுத்தி இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக நாம் வக்காலத்து வாங்குவதோ, கம்யூனிஸ்ட் கட்சியினரின் மீது சர்க்கார் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்து, அப்படிப்பட்ட தீச்செயல்களுக்குப் பரிந்து பேசவேண்டுமென்பதோ நம் கருத்தல்ல.
… … …
ஒரு சிலர் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, அக்கட்சியினர் எல்லோருக்குமே ஏன் தடைவிதிக்க வேண்டும்? அப்படியே கட்சிக்குத் தடை விதிக்க வேண்டுமென்றாலும், அக்கட்சியினரின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று சொல்லப்படும் 19 வகையான தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகளின் நடவடிக்கைகளுக்கும் ஏன் தடை விதிக்க வேண்டும்? என்று கேட்பது இந்நாட்டில் பாடுபடும் ஒவ்வொருவருக்கும் உரிய கடமையல்லவா என்று கேட்கிறோம்.

பலாத்கார நடவடிக்கைகளை அதாவது பொது ஸ்தாபனங்களைத் தீயிட்டுக் கொளுத்துவது, கொள்ளையிடுவது போன்ற அட்டூழிய நடத்தைகளை வீரச்செயல்கள், புனிதமான தொண்டு என்று பலபடியாக வர்ணித்து, அப்பேர்ப்பட்ட காலித்தனங்களில் பங்குகொண்டவர்களைத் தியாகிகள் என்பதாக முத்திரைக்குத்தி, அவர்களுக்கு வீரமானியமும் கொடுக்க முன்வந்த ஒரு கட்சியின் சர்க்கார், தம் பழைய அடிச்சுவட்டைப் பின்பற்றுகிற சில கம்யூனிஸ்ட்டுகளை மட்டும் இன்று குற்றம் சுமத்தி அழிவு வேலைக்காரர்கள் என்று அறிவிக்கிறார்கள் என்றால் இந்த அறிவிப்பு, ஆகஸ்டு தியாகிகளின் சாயத்தை வெளுத்து விடமாட்டாதா? என்றுதானே பொதுமக்கள் எண்ண வேண்டும்.

எந்தக் கட்சிக்காரர்களாய் இருந்தாலும், பலாத்காரச் செயல்களில் ஈடுபட்டவர்களை, நாம் ஒவ்வொரு தடவையிலும் வன்மையாகவே கண்டித்து வந்திருக்கிறோம். இந்த நாட்டுநலம் கருதும் எவரும் எந்தக் காரணத்தாலும் பலாத்காரச் செயல்களை ஆதரிக்க முடியாதென்பது உறுதி. ஆனால் “மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்கிற நியாயம் கம்யூனிஸ்ட்டுகள் விஷயத்தில் காட்டப்படுகிற காரணத்திற்காகத்தான் நாம் இதை எடுத்துக்காட்ட நேர்ந்தது.
… … …
சர்க்கார் கம்யூனிஸ்ட்டுகள் மீது சாட்டியிருக்கும் குற்றச்சாட்டு, நாச வேலைகள், குழப்பம் உண்டுபண்ணும் முயற்சி! கம்யூனிஸ்ட்டு தோழர்கள் பலாத்காரத்தில் நம்பிக்கையுடையவர்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். குழப்பம் உண்டு பண்ணுவதுதான் வெற்றிக்குவழி - தொழிலாளிக்கு நன்மை என்று முடிவு கட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம். ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, இந்தப்பாதை தவறானது என்பதையும் வற்புறுத்திக் கூறுகிறோம். ஆனால் பலாத்காரத்தில் நம்பிக்கையுடைய, சர்க்கார் வியாக்கியானப்படி செல்வாக்கில்லாத "கால்கள்” சட்டவிரோதம் என்கிற ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிவைத்து நசுக்கவேண்டிய அளவுக்கு எப்படிப் பலம் பெற்றார்கள்? அதற்கான சூழ்நிலையை அறிந்து அதற்கான பரிகாரம் செய்திருந்தால்"காலிகள் எப்படி வளர்ச்சியடைந்திருக்க முடியும்?
… … …
பொது மக்களிடம் ஆதரவு பெற, அவர்களின் அனுதாபத்தையடைய கம்யூனிஸ்ட்கள் எத்தனையோ வழிகளில் முயன்றார்கள். அந்தமுயற்சி பலன்தரவில்லை. வேறுவழியில்லாமல் இப்போது குழப்பமுண்டு பண்ணுகிறார்கள் என்று விளக்கந்தரும் சர்க்கார், தங்கள் ஜம்பத்துக்காக இப்படிச் சொல்லியாக வேண்டியிருக்கிறதென்றால் நன்றாகச் சொல்லிக்கொள்ளட்டும், ஆனால் குறிப்பிட்ட தொழில் ஸ்தாபனங்களைத் தவிர, மற்ற மக்களிடம், இந்தநாட்டுக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எந்தக்காலத்திலும் தொடர்பு இருந்ததில்லை, தொடர்பை உண்டாக்கிக் கொள்ள முயலவும் இல்லை, அதற்கான திட்டமுமில்லை என்பதை நாடறியும்.

"கம்யூனிஸ்ட்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயல்கிறார்கள்". தடைவிதிப்பதற்கு இதை ஒரு காரணமாகச் சொல்லும் சர்க்காரின் அறிக்கையைக் கண்டு நாம் உண்மையாகவே பரிதாபப்படுகிறோம். ஆளவந்தவர்கள் எப்படிப்பட்ட அறியாமையின் சிகரத்தில் வீற்றிருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது எவரும் சிரிக்காமல் இருக்க முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றி, ஆளும் உரிமை, என்றைக்குமே தமக்குத்தான் சாஸ்வதம் என்கிற பைத்தியக்கார எண்ணத்தைத் தவிர, இந்தக் குற்றச்சாட்டுக்கு வேறு என்ன உண்மையான காரணம் சொல்லமுடியும்?
… … …
கம்யூனிஸ்ட் ஆதிக்கத்திலுள்ளவையென்று கூறிப் பல தொழிலாளர்களின் சங்கங்களுக்கு விதித்திருக்கும் தடையை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்டிப்பது மட்டுமல்ல, இன்றைய காங்கிரஸ் சர்க்கார், முதலாளிகள் - பனியாக்களின் ஒரு அய்க்கிய முன்னணி என்பதையும் உலகத்துக்கேகாட்டவில்லையா? என்றும் கேட்கிறோம்"

பாடுபட்டுழைக்கும் பாட்டாளிக்கு மதிப்புத் தருபவர்கள்தான் இன்றைய ஆளவந்தார்கள் என்று சொல்வது உண்மையானால், உடனடியாகச் செய்யக்கூடிய வேலை, முதலில் தொழிலாளர் சங்கங்களுக்குப் போட்டிருக்கும் தடையை நீக்கிவிடுவதுதான் ஆனால் இன்றைய பனியா ஏகாதிபத்தியம் அப்படிச் செய்யுமா?

அடக்குமுறைகளை அடிக்கடி கூப்பிட்டு, அதன் கொடூர நர்த்தனத்தைக் கண்டு கும்மாளமிட்டுக் கோலோச்சியோரை, எந்த நாடும், எந்தக் காலத்திலும் வரவேற்றதுமில்லை , நெடுங்காலம் வாழவிட்டதுமில்லை. உலக வரலாறு கூறுகிற இந்த உண்மையை ஆளவந்தார்கள் அறிந்திருக்க வேண்டும். இன்றேல் அறிந்து கொள்வார்களாகம்!”
('குடிஅரசு' - தலையங்கம் - 01.10.1949)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 236/240)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக