திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 53:-


தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை

“தொழிலாளர்களின் நலன் என்று பெரியார் கருதுவதை அரசியலாளர்களும் தொழிலாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கிறார். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே என்கிறார் பெரியார். பார்ப்பனர்களில் உள்ள பணக்காரர்களைவிடப் பார்ப்பான் அல்லாதவர்களிடையே தான் அதிகப் பெரும் கோடிஸ்வரர்கள் இருக்கின்றனர். இந்தக் கோடிஸ்வரர்களிடம் தான் பெரும்பாலான தொழிலாளர்களாகள் வேலை செய்கின்றனர், அப்படி இருக்கப் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றம் என்ற பெரியாரால் எப்படிச் சொல்ல முடிகிறது?

எப்படி என்றால் பார்ப்பனியத்தின்படி இரண்டு சாதி தான் இருக்கிறது ஒன்று பிராமணன் மற்றொன்று சூத்தரன். இதன்படி பார்ப்பனரல்லாத அத்தனை பேரும் முதலாளிகள் மற்றவர்கள் தொழிலாளர்கள் என்கிறார். தொழிலாளர்கள் என்று பெரியார் கூறுகின்ற பல கோடிஸ்வர்களிடம் தான் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட கோடிஸ்வரர்களிடம் இருந்து தொழிலாளர்களுக்கு எப்படி விடுதலை கிடைக்கும் என்று பெரியாரிடம் கேள்வி எழுப்பினால் பதில் கிடைக்காது. அப்படிப் பதில் வந்தால் அது எப்படி இருக்கும்?

முதலில் சமூகச் சமதர்மம் கிடைக்க வேண்டும் பிறகு தான் பொருளாதாரச் சமதர்மம் என்று கூறுவார். பெரியார் கூறுகிற காலம் வரும்வரை பார்ப்பனரால்லாத பணக்காரர்களிடம் ஏழைத் தொழிலாளர்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான். மேலும் பெரியார் கூறுகிறார், “ஆலையில் வேலை செய்பவனுக்கு ஒரு நாலணா கூலி அதிகமாகக் கிடைத்து விட்டதாலேயே தொழிலாளிப் பிரச்சினை முடிந்துவிடாது இது உண்மை தான் கூலிவுயர்வால் தொழிலாளர்களுக்கு முழுமையான விடுதலைக் கிடைக்காது. ஆனால் பழைய நிலைமைகளைவிடச் சற்று மேம்படும். இந்தச் சிறிய மேம்பாடு தொழிலாளர் என்கிறநிலையை மாற்றிடாது ஆனால் இதன் தொடர்ச்சியாகத்தான் தொழிலாளர்களை வர்க்க அரசியல்படுத்த முடியும்.

பெரியார் வர்ண அரசியலைப் பேசுவதனால் இந்தப் போக்கு பார்ப்பனர்களுக்கு மட்டுமே பிரச்சினையாகவும், பார்ப்பான் அல்லாத பிற பணக்காரர்களுக்குப் பிரச்சினையாக இல்லை. அப்படிப்பட்ட பணக்காரர்களை இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பெரியார் தயாராகத் தான் இருந்துள்ளார்.

வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் பெரியாரின் தொழிலாளர் நலம் பற்றிய கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அன்றும் இன்றும் என்றும்.”

தந்தை பெரியார்:-

“எதனால் தொழிலாளர் நன்மை அடைவார் என்பதில் எனக்கும் அரசியலாளர்கள், தொழிலாளர்களுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டதால், என்னால் தொழிலாளருடன் அதிகமாகக் கலந்துகொள்ள முடியாது போயிற்று.

எனினும் தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை - பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே. இயந்திரத்தின் பக்கத்தில் நிற்பவனே தொழிலாளி என்று கருதுகிறார்களே ஒழிய, நிலத்தை உழுபவன் - உழவனும் தொழிலாளிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால்தான் அவ்வியக்கம் எத்தன்மையது என்பதை உணர்வர்.

இந்து மதக் கோட்பாட்டின்படி, நாம் அத்தனை பேரும் தொழிலாளிகளே. பல வர்ணம், ஜாதிகள் சொல்லப்பட்டாலும், உலகத்தில் சூத்திரன், பிராமணன் என்ற இரண்டே ஜாதிதான் உண்டு என வருணாசிரமிகள் என்போரும், வைதிகர்கள் என்போரும் கூறி வருகின்றனர். இவ்வாறு பார்க்கும்போது பார்ப்பனர்கள் அத்தனை பேரும் முதலாளிகள், நாம் அனைவரும் தொழிலாளிகள். பார்ப்பனர்கள் பாடுபடாமலேயே வயிறு வளர்க்கின்றனர். நாம் பாடுபட்டும் வயிறு கழுவ முடியாத நிலையிலிருக்கின்றோம். எனவே, இந்நிலை மாறினால்தான் நமது தொல்லைகள் நீங்குமே ஒழிய, ஆலையில் வேலை செய்பவனுக்கு ஒரு நாலணா கூலி அதிகமாகக் கிடைத்து விட்டதாலேயே தொழிலாளிப் பிரச்சினை முடிந்துவிடாது.”
(குடிஅரசு – சொற்பொழிவு – 25-06-1939)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 124)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக