வெள்ளி, 13 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 47:-


சமதர்மம்

“பொதுவுடைமை சட்ட விரோதமா? என்பதில் தீர்ப்புக்கும் சட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பெரியார் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

பெரியாரின் இறுதி லட்சியம் சமதர்மம் என்று இறுதிவரை கூறிவந்தாலும், “நான், சட்டத்தை மீறுவது என்ற திட்டத்தைக் கொண்டவனல்ல” என்ற முடிவு, சமதர்மத்தை எவ்வாறு அடைவது, அதை அடைவதற்கான தடைகளை எவ்வாறு களைவது என்பதில் பெரியார் தெளிவாக இல்லை என்பது தெரிகிறது.

பிறவி வேறுபாடு காரணமாக உள்ள பேதத்தைக் களையாமல் பொருளாதாரப் பேதம் என்கிற சமதர்மத்தை அடைய முடியாது என்பதே பெரியாரின் கருத்தாக இருக்கிறது. அதனால் பொருளாதாரப் பேதத்தை முன்னிலைப்படுத்துவது மேல்நாட்டுச் சமதர்மம் (மேலை மார்க்சியம்) என்று கூறிவிடுகிறார்.

எந்தக் காரணத்தைக் கொண்டேனும் இன்று நம் நாட்டில் பொதுவுடைமை வந்தாலும், இங்குள்ள சாதி முறைகளால் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமைக்குக் கொண்டு சென்றுவிடும் என்று பெரியார் கூறுகிறார். சாதி என்பதே பொருளாதாரத்தை முன்வைத்து ஏற்படுத்தப்பட்டதே ஆகும். ஒவ்வொன்றின் தோற்றத்திற்கும் பொருளாதாரக் காரணம் இருக்கிறது என்பதே மார்க்ஸ் கூறிய பொதுவுடைமைக் கோட்பாடு. சாதி என்றாலும் சரி, மதம் என்றாலும் சரி அதற்கான பொருளாதார வேர்கள் இருக்கின்றன. அதனைக் களைவதின் மூலமே அவைகளை முழுமையாக வீழ்த்த முடியும் என்று மார்க்ஸ் மார்க்சியம் கூறுகிறார். பெரியாரைப் பொருத்தளவில் இது வேலை நாட்டுச் சமதர்மம் (மேலை நாட்டு மார்க்சியம்).

இந்த மேல் நாட்டுச் சமதர்மத்தை பெரியார் புரிந்து கொள்ளாததனால் தான், மதத்தையும் சாதியையும் கருத்துநிலையாக நினைத்துக் கொண்டு அதனைக் கருத்து நிலைகளால் எதிர்த்து வீழ்த்தாலாம் என்று கருதுகிறார். மதத்தின் வர்க்க சார்பை பெரியார் புரிந்து கொள்ளாததனால், பணக்காரர்களுக்கு மதம் சேவை செய்வதற்குத் தோற்றுவிக்கப்பட்டது என்பதை உணராது, மதம் இருப்பதனால் தான் பணக்காரத் தன்மை இருப்பதாகவும் அந்த மூடநம்பிக்கை போக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்.

நாட்டுக் கோட்டையார்கள் போன்ற பணக்காரர்கள் மதத்திற்கு 10-20 லட்சம் செலவு செய்வது தமது வர்க்க நலனுக்கானதே தவிரத் தமது அறியாமையிலோ, மூடநம்பிக்கையிலோ அல்ல. இதனைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சிய பொருள்முதல்வாதப் புரிதல் அவசியம்.

மனித வாழ்க்கைக்கும் பேதாபேதங்களுக்கும் கடவுள் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் பட்சத்தில் அந்தக் கடவுள் பற்றித் தமக்கு என்ன கவலை? என்று பெரியர் கேள்வி கேட்கிறார். இதனை அவர் தர்கத்திற்காக முன்வைத்துள்ளார் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. மதத்தின், சாதியின் வர்க்க சார்பை அவர் புரிந்து கொள்ளாததின் வெளிப்பாடாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது.”

தந்தை பெரியார்:-
தலைவரவர்கள் சமதர்மம் பொதுவுடமை என்பதைப் பற்றி பேசுவது குற்றமல்ல என்றும், ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருவர் தீர்ப்புக் கூறிவிட்டதாகச் சொன்ளார். அந்த மாதிரி பல தீர்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை காகிதத் தீர்ப்பேயொழிய நடைமுறைத் தீர்ப்பல்ல.

அந்தத் தீர்ப்புகளுக்கு எல்லா மேஜிஸ்ட்ரேட்களும் மதிப்பு கொடுக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அந்தந்த சந்தர்ப்பம் அந்தந்த இடத்து அவ்வப்போதைய நிலமை, சர்க்காரின் மனப்பான்மை, பேசிய ஆளின் தன்மை ஆகியவைகளைக் கவனித்துத்தான் அமுல் நடத்துவார்கள். - ஜட்ஜி தீர்ப்பை விட சட்டமே பிரதானமாளது. பொது உடைமை சட்ட விரோதம் என்று சர்க்கார் ஒரு பக்கத்தில் சட்டம் செய்துவிட்டு மற்றொரு பக்கம் பொது உடைமைப் பிரசாரம் குற்றமல்ல என்று தீர்ப்புச் செய்தால் இதில் ஏதாவது இரகசியம் இருக்கத்தான் வேண்டும்.
… … …
… … ஆதலால் ஜட்ஜ்கள் தீர்ப்புகளைவிட சட்டம்தான் முக்கியமானதாய் இருக்கிறது. சட்டமோ சர்க்கார் இஷ்டப்படி நடக்க இடம் கொடுக்கக் கூடியது. ஆனால், சட்டத்தில் சமதர்மம் என்பது சட்ட விரோதம் என்று இன்னமும் நமது அரசாங்கம் தீர்மாளிக்கவில்லை. நான் சட்டம் மீறுவது என்ற திட்டத்தைக் கொண்டவளல்ல. ஆனாலும் இன்று சமதர்மத்தைப் பற்றிப் பேசுவதைப் பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை.
… … …
இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்கு சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இன்று இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு, தாழ்வு, பேதாபேதம் இல்லை.

பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நமதுநாட்டு சமுதாய உயர்வு தாழ்வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால் அதற்கு நம் நாட்டு மக்கள் அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்ப மாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள். ஏனெனில் பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்மந்தப்பட்டு அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும் அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்கு தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டு சமதர்மம் பேசுவது பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல்படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுருத்தி வருகிறேன்.
… … …
நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதிபேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மளிதன் வாழ முடியும்.

பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள் களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத் தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்கு காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நமது மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மம் சொன்னால் தான் உண்மையாக கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம். ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.
… … …
செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும் பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும் கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்.
… … …
நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள், இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டுக்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால், தொழில் முறையினால், மளவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்கு சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்கு கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்.
… … …
தோழர்களே இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளை கற்பித்து நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.

சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங்கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலத்துக்கு தான் பயன்படுகின்றதே ஒழிய, வேறு காரியத்துக்கும் கடவுள் பயன்படுவதே இல்லை.
… … …
எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக் கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை - மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக் கூடாது என்றும் தான் சொல்லி வருகிறேன். மனித வாழ்க்கைக்கும் பேதா பேதங்களுக்கும் கடவுள் சம்மந்தமில்லை என்று சொல்லும் பலம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?
(குடி அரசு - சொற்பொழிவு - 15.09.1935)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 64/71)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக