புதன், 11 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 43:-


மே தினக் கொண்டாட்டம் (28-04-1935)

(தொழிலாளர்களின் இறுதிக் குறிக்கோளைப் (Strategy) பற்றிப் பெரியார் அதிகம் பேசுகிறார், அதாவது தொழிலாளர் ஆட்சியை அமைத்தல், ஆனால் அதற்கான போராட்டத்தில் கவனம் செலுத்தவில்லை. இறுதிக்கோரிக்கையான தொழிலாளர் அரசை அடைய வேண்டுமானால் அதற்கான செயற்திட்டத்தை (Tactics) அமைத்து செயற்பட வேண்டும். செயற்திட்டமே இறுதி நோக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

கூலி உயர்வை மறுத்தல், தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகிற அறிவுத்தலைமையை மறுத்தல் போன்ற பெரியாரின் போக்குச் செயற்திட்டத்திற்குத் தடையாகவே இருக்கிறது. செயற்திட்டத்தில் பயணிக்காமல் இறுதி நோக்கத்தை அடைய முடியாது.)

தந்தை பெரியார்:-
சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள், ஆண்களும், பெண்களும் மே மாதம் 1ம் தேதியை "தொழிலாளர் தின"மாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ரஷிய சமதர்மத் தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷியாவில் கொண்டாடுகிறார்கள்.

பிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைப்பாடுகளை பகிரங்கப் படுத்தி, பரிகாரம் வேண்டுகிற முறையிலும் தொழிலாளர்களின் சுபீஷ வாழ்க்கை, சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் (Ergatocracy) அதாவது தொழிலாளர் குடிஅரசாலுமே (Proletarian Democracy) சித்திக்கு மெனத் தீர்மானிக்கும் முறையிலும் மே தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவிலும், சில வருஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இவ்விழா மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பட்டது.

சுயமரியாதை. வீரர்களே! சமதர்மிகளே! தொழிலாளர்களே! தொழிலாளிகளின் தோழர்களே! இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன்.

தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(குடி அரசு – துணைத் தலையங்கம்- 28-04-1935)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 33-34)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக