திங்கள், 23 மார்ச், 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 58:-


தொழிலாளர் கடமை

(குடிஅரசில் (30-05-1926) வெளியிடப்பட்டதை மறுவெளியீடாகக் குடிஅரசில் (18-10-1947) வெளியிடப்பட்டுள்ளது. இதில் காணப்படும் கருத்தே பெரியாரின் முடிபான கருத்து. அதனால் இதனைச் சற்று நிதானமாகவும் ஆழ்ந்தும் படிக்க வேண்டும்.

தொழிற் சங்கங்களில் காணப்படும குறைபாட்டின் மூலம் தொழிற் சங்கத்தைப் பெரியார் மறுக்கவில்லை. அதில் ஒரு சத்தும் இல்லை என்றே முடிபாகக் கூறிவிட்டார்.

இன்றைய தொழிலாளர்களை அதாவது தொழிற்சங்கம் வைத்துச் செயற்படும் தொழிலாளர்களைக் கூலித் தொழிலாளர்கள் என்று கூறுகிறார். வாரத்திற்கு ஒரு முறை கூலிவாங்கும் கூலித் தொழிலாளர்களும் தொழிலாளர்கள் தானே. அதனால் கூலித் தொழிலாளியாய் இருப்பது எந்த வகையிலும் சிறுமை கிடையாது. கூலி என்ற வார்த்தை இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.

இத்தோடு பெரியார் நில்லாமல், கூலி உயர்வுக்காகச் சங்கம் வைத்துப் போராடுவதைப் பார்த்து கேட்கிறார்: “முதலாளியைப் பார்த்து, நீ இவ்வளவு ரூபாய் கொள்ளையடிக்கிறாயே, நீ இவ்வளவு சுகப்படுகிறாயே என்கிற பொறாமையின் மேல், ஏன் எனக்கு இன்னும் கொஞ்சம் கூலி சேர்த்துக் கொடுக்கக் கூடாது என்று பல்லைக் காட்டிக் கெஞ்சுகிறீர்கள், தனித்தனியாய்க் கெஞ்சுவதற்குப் பதிலாய் நாலு பேர் சேர்ந்து கெஞ்சுவதைத் தொழிலாளர் சங்கம் என்கிறீர்கள்.”

வர்க்க முரணால் எழும் போராட்டத்தைப் பெரியார் பொறாமையின் வெளிப்பாடு என்கிறார்.

தமது வியாதி இன்னதென்று கண்டு பிடிக்க முடியாத தொழிலாளர்கள், ஊருக்கு வைத்தியம் செய்வதென்பது சிரிப்புக்குரியது என்கிறார். இத் தொழிலாளர்கள் ஊராருக்கு உதவிடுவது தவறில்லை என்றால் ஊரில் உள்ள சிலர் சங்கத்தில் இணைத்து இவர்களுக்கு உதவிடுவது எந்த வகையில் தவறானதாகும்.

எதிர் காலத்தில் சோஷலிசம் வரும், அதற்கு எத்தனை தலைமுறை கடக்க வேண்டிருக்கும் என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதுவரை கூலியுயர்வு கேட்காதீர் என்று கூறுவது, தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டல்ல. பெரியாரின் கூற்றில் ஒளிந்திருக்கும் நலன் யாருக்கானது என்பதைப் பெரியார் இறுதியில் கூறுவதைக் கொண்டு முடிவெடுக்கலாம்.

தொழிலாளர்கள் மத்தியில் நிர்வாகிகள் கிடைக்கவில்லை என்றால், சங்கம் கண்டிப்பாக வேண்டாம், சங்கம் நடத்துவதற்குத் தொழிலாளர்களுக்குள் சக்தி வரும் வரை முதலாளிகளை அனுசரித்தே பிழையுங்கள் என்பதே பெரியாரின் அபிப்பிராயம்.

இதனை எந்த வாதத்திறமையினாலும் தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிபிலிக்கிறது என்று நிறுவிட முடியாது. நேரடியாக முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் பெரியாரின் கூற்றைத் தொழிலாளர்கள் அன்றும், இன்றும், என்றும் ஏற்க மாட்டார்கள்.)

தந்தை பெரியார்:-
பொதுவாய் தொழிலாளர் சங்கம் என்றாலே எனக்கு அதனிடத்தில் விருப்பமிருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்றுவதில்லை. சில வெறும் வெளி ஆசாமிகள் அதை தங்கள் நன்மைக்கும் கீர்த்திக்கும் ஏற்படுத்திக் கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம். அல்லாமலும் நமது நாட்டில் உண்மையான தொழிலாளிகளே கிடையாது

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் தொழிலாளிகளல்ல. அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தான். தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்கான ஒரு தொழிலைக் கற்று அத் தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து, அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான முறையில் தொழில் செய்பவன்தான் தொழிலாளி. நீங்கள் அப்படியில்லை. ஏதோ ஒரு முதலாளியின் கீழ் தினக்கூலிக்கமர்ந்து, உங்களுக்கு எவ்வித சுதந்திரமுமில்லாமல் முதலாளி சொல்லுகிறபடி செய்துவிட்டு, அதன் பலன் முழுவதையும் அவனே அடையும் படி செய்து, உங்கள் ஜீவனத்திற்குக் கூட போதுமானதாய் இல்லாத கூலியை வாங்கிப்பிழைக்கிறீர்கள். ஒரு முதலாளிக்குக் கீழ் வேலை செய்து கூலி வாங்குபவன் எவ்வளவு பெரிய கூலிக்காரனானாலும் அவன் கூலிக்காரன்தான், அடிமை தான்.
… … …
வாரத்திற்கு ஒருமுறை கூலி வாங்கிக்கொள்ள வேண்டியது. தெருக்களில் கூலிக்கு மூட்டை தூக்கி அவ்வப்போது கூலிவாங்கும் நபருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தங்களுக்கு கூலி போதாது. அதிக பாரமாயிருக்கிறது. இன்னும் சேர்த்துக் கொடு என்று முதலாளியைக் கேட்பதற்கும் நீங்கள் சங்கம் என்று பெயர் வைத்துக்கொண்டு செய்யும் தீர்மானங்களுக்கும் என்ன வித்தியாசம்?
… … …
உங்கள் தொழிலின் அருமை இன்னதென்று கூட உங்களுக்குத் தெரியாமல் முதலாளியைப் பார்த்து, நீ இவ்வளவு ரூபாய் கொள்ளையடிக்கிறாயே, நீ இவ்வளவு சுகப்படுகிறாயே என்கிற பொறாமையின் மேல், ஏன் எனக்கு இன்னும் கொஞ்சம் கூலி சேர்த்துக் கொடுக்கக் கூடாது என்று பல்லைக் காட்டிக் கெஞ்சுகிறீர்கள், தனித்தனியாய் கெஞ்சுவதற்குப் பதிலாய் நாலு பேர் சேர்ந்து கெஞ்சுவதைத் தொழிலாளர் சங்கம் என்கிறீர்கள்.
… … …
உங்கள் தொழிலின் அருமை இன்னதென்று கூட உங்களுக்குத் தெரியாமல் முதலாளியைப் பார்த்து, நீ இவ்வளவு ரூபாய் கொள்ளையடிக்கிறாயே, நீ இவ்வளவு சுகப்படுகிறாயே என்கிற பொறாமையின் மேல், ஏன் எனக்கு இன்னும் கொஞ்சம் கூலி சேர்த்துக் கொடுக்கக் கூடாது என்று பல்லைக் காட்டிக் கெஞ்சுகிறீர்கள், தனித்தனியாய் கெஞ்சுவதற்குப் பதிலாய் நாலு பேர் சேர்ந்து கெஞ்சுவதைத் தொழிலாளர் சங்கம் என்கிறீர்கள்.
… … …
கண்டிப்பாய் அரசியலில் நீங்கள் சேரவே கூடாது. அரசியல் உங்களிடம் வந்து சேரட்டும். அரசியல்காரர் உங்களைத் தலைவர்களாகக் கொள்ளட்டும். அப்பேர்ப்பட்ட நாளை எதிர்பாருங்கள்.

உங்கள் சங்கங்களுக்கெல்லாம் நீங்களே தலைவர்களாகுங்கள். உங்கள் நாட்டுத் தொழிலாளர் சங்கங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேருங்கள். பிறகு தொழிலாளர் கக்ஷி என்று ஒரு பொதுக் கட்சியை ஏற்படுத்துங்கள். அதில் உங்கள் தொழிலின்பலன் முழுவதையும் நீங்களே அடையத்தக்கதாகவும் தொழிலாளர்களுக்கு வேண்டிய நன்மைகளையும், பொதுமக்களுக்கு வேண்டிய நன்மைகளையும் கொள்கையாக வைத்துப் பரப்புங்கள். அதில் எல்லோரையும் வந்து சேரும்படி செய்யுங்கள். தொழிலாளர் கட்சி நாட்டையாளும்படி செய்யுங்கள்.
… … …
இன்று முதல் அரசியலையும் அரசியல்காரரையும் மறந்து விடுங்கள். உங்கள் சங்கத்திற்கும் வருஷாந்திரக் கொண்டாட்டங்களுக்கும் தொழிலாளர்களையே தலைவர்களாய் ஏற்படுத்துங்கள். அவர்களுக்கு சக்தியில்லையே என்று குறைகூறாதீர்கள். அது உங்களுக்கு அவமானம். அதை விட மோசமானவர்களை நீங்கள் தலைவர்கள் என்கிறீர்கள். அயோக்கியர்களைவிட முட்டாள்கள் நல்லவர்கள் என்றே சொல்லுவேன். இருக்கிறவர்களை வைத்துக்கொண்டு காரியம் நடத்துங்கள்.
… … …
உங்களிலேயே உங்களுக்குத் தலைவர்களும், காரியதரிசியும், நிர்வாகிகளும் கிடைக்கவில்லையானால் கண்டிப்பாய் உங்களுக்கு சங்கம் வேண்டாம். இந்த நிலையில் நீங்களும் சங்கம் வைத்து நடத்த சக்தியற்றவர்கள், உங்களுக்குள் தலைவர் ஏற்பட்டு நடத்த சக்தி வரும் வரை முதலாளிகளை அனுசரித்தே பிழையுங்கள்.
(குடிஅரசு – 30-05-1926)
(மறுவெளியீடு – குடிஅரசு – சொற்பொழிவு – 18-10-1947)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் III – பக் 171/177)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக