புதன், 5 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 03:-


(தொழிலாளி – முதலாளி - தொழிலாளர் சங்கம் - ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளாத தந்தை பெரியாரிடம், முதலாளி-தொழிலாளிப் (முதலாளித்துவப்) பிரச்சினைகளுக்குத் தீர்வு இருக்கும் என்று எதிர் பார்க்க முடியுமா? முதலாளித்துவத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவர் வர்ணப் போராட்டத்தைத் தான் முன்வைப்பார், வர்க்கப் போரட்டத்தையா முன்வைப்பார்? வர்ணப் போராட்டத்தை நடத்திக் கொண்டு, முதலாளிகளை அனுசரித்துப் பிழைப்பதற்குத் தான் ஆலோசனை கூறுவார்.)


“தொழிலாளர் சங்கம்

பொதுவாய் தொழிலாளர் சங்கம் என்றாலே எனக்கு அதனிடத்தில் விருப்பமிருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்று வதில்லை. சில வெறும் வெளி ஆசாமிகள் அதை தங்கள் நன்மைக்கும் கீர்த் திக்கும் ஏற்படுத்திக் கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம். அல்லாமலும் நமது நாட்டில் உண்மையான தொழிலாளிகளே கிடையாது.

தொழிலாளர் யார்?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோ ரெல்லாம் தொழிலாளிகளல்ல, அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தான் , தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்கான ஒரு தொழிலைக் கற்று அத் தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து, அதன் பலன் முழுவ தையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான முறையில் தொழில் செய்பவன்தான் தொழிலாளி. நீங்கள் அப்படியில்லை. ஏதோ ஒரு முதலாளியின் கீழ் தினக்கூலிக்கமர்ந்து, உங்களுக்கு எவ்வித சுதந்திரமுமில்லாமல் முதலாளி சொல்லுகிறபடி செய்துவிட்டு, அதன் பலன் முழுவதையும் அவனே அடையும் படி செய்து, உங்கள் ஜீவனத்திற்குக் கூட போதுமானதா யில்லாத கூலியை வாங்கிப் பிழைக்கிறீர்கள். ஒரு முதலாளிக்குக் கீழ் வேலை செய்து கூலி வாங்குபவன் எவ்வளவு பெரிய கூலிக்காரனானாலும் அவன் கூலிக்காரன்தான்- அடிமை தான்.
… … …
நீங்களே தலைவராகுங்கள்

ஆதலால், இன்று முதல் அரசியலையும் அரசியல்காரரையும் மறந்து விடுங்கள். உங்கள் சங்கத்திற்கும் வருஷாந்திரக் கொண்டாட்டங்களுக்கும் தொழிலாளர்களையே தலைவர்களாய் ஏற்படுத்துங்கள். அவர்களுக்கு சக்தியில்லையே என்று குறை கூறாதீர்கள். அது உங்களுக்கு அவமானம். அதை விட மோசமானவர்களை நீங்கள் தலைவர்கள் என்கிறீர்கள். அயோக்கியர்களைவிட முட்டாள்கள் நல்லவர்கள் என்றே சொல்லுவேன். இருக்கிறவர்களை வைத்துக்கொண்டு காரியம் நடத்துங்கள். கூடிய சீக்கிரம் எல்லாம் சரிபட்டுப் போகும்.

நான் ஒரு சிறு கதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு குளத்திலுள்ள தவளைகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டு மென்று கடவுளைக் கேட்டதாகவும், கடவுள் ஒரு மரக்கட்டையைத் தலைவராகக் கொடுத்ததாகவும், அம்மரக்கட்டை ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்த தாகவும், பிறகு தவளைகள் கடவுளிடம் எங்களுக்குக் கொடுத்த தலைவர் உபயோகமில்லையென்று வேறு தலைவர் வேண்டுமென்று கேட்டதாகவும், கடவுள் ஒரு பாம்பைத் தலைவராகக் கொடுத்ததாகவும், அந்த பாம்பு தினமும் 10 தவளைகளைத் தின்று வந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளை நோக்கி தங்களுக்குக் கொடுத்த தலைவரை எடுத்துக் கொள்ளும்படி வேண்டி தங்கள் காரியத்தை வேறொரு தலைவரில்லாமல் தாங்களே பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அது போல் உங்களிலேயே உங்களுக்குத் தலைவர்களும், காரியதரிசியும், நிர்வாகிகளும் கிடைக்கவில்லையானால் கண்டிப்பாய் உங்களுக்கு சங்கம் வேண்டாம். இந்த நிலையில் நீங்களும் சங்கம் வைத்து நடத்த சக்தியற்றவர்கள். உங்களுக்குள் தலைவர் ஏற்பட்டு நடத்த சக்தி வரும் வரை முதலாளிகளை அனுசரித்தே பிழையுங்கள். வீணாக 'குளத்தைக் கலக்கிப்பிராந்துக்கு விட்டது போல்' உங்கள் உழைப்பால் உங்கள் முதலாளிமார் பிழைப்பதோடல்லாமல், உங்களால் மோசக்காரர் பிழைக்கும்படி செய்து நீங்கள் கஷ்டப்படாதீர்கள். நீங்கள் என்னைக் கூப்பிட்ட போதே இதைத்தான் சொல்ல நினைத்தேன். இதுதான் உங்கள் சம்பந்தமான என்னுடைய அபிப்ராயம்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I- பக்- 20-26)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக