வியாழன், 27 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 26:-


(சமூக முற்போக்குக்கு, பொருளாதாரமும் அரசியலும் அவசியம் என்கிறார் பெரியார். பார்ப்பன சூழ்ச்சியை மட்டும் பேசிக் கொண்டிருப்பது சுயமரியாதை இயக்கமல்ல என்று 1933ஆம் ஆண்டுக் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் விலகாது தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் போக்கிலேயே நின்றுந்தால் வர்க்கப் போராட்டத்திற்கு உட்பட்டு வர்ணப் போராட்டத்தை நடத்தியிருப்பார்.

அரசியலைப் பற்றிப் பேசிவிட்டு, அன்னியர் ஆட்சி என்பதனால், எந்த ஆட்சியையும் அழிக்க வேண்டியதில்லை என்ற முடிவு எந்த வகையான அரசியல்!! மேலும் பலாத்காரமும, ரகசியமும் வேண்டாம் என்று முடிக்கும் போது அவரது அரசியலின் மென்மைப் போக்கு வெளிப்படுகிறது.)

தந்தை பெரியார்:-
“பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்கு பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதா அல்லவா? இந்த இரண்டையும் விட்டு விட்டு செய்யும் முற்போக்குக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும், பார்ப்பன சூழ்ச்சியையும் பேசி காலங்களிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கத்தின் வேலையானால் சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.
… … …
அரசியலைப்பற்றியும், பொருளாதாரக் கொடுமையைப்பற்றியும் பேசுவதே குற்றமான காரியம் என்று சில தோழர்கள் கருதி இருப்பதாகத் தெரி கின்றது. அது வீண் பயங்காளித்தனமேயாகும். இந்த மாதிரி பயங்காளித்தனம் கொண்ட மனதினால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அரசியலுக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் நாம் யாரையும் அடிக்கவோ, தடுக்கவோ, குத்தவோ, சுடவோ, வெடிகுண்டு எறியவோ அல்லது எவ்வித பலாத்காரத்தை உபயோகிக்கவோ வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்பதற்கு நாம் எத்தனை பேரைக் கொன்றுவிட்டோம், யாரை சுட்டோம், யார் மீது வெடிகுண்டு போட்டோம்,
… … …
அன்னிய அரசாங்கமே வேண்டியதில்லை. எங்கள் தேசத்தை எங்களிடம் ஒப்புவித்து விட்டு வெளி நாட்டார் வெளியாகிவிடவேண்டும்” என்று சொல்லும் தேசியவாதிகளின் அரசியலை விட நம்முடைய அரசியல் கொடுமையானதல்ல. முட்டாள் தனமானதல்ல. நாம் என்ன சொல்லுகின்றோம்?

அன்னியன் என்பதற்காக யாரையும் நாட்டைவிட்டு போகும்படி சொல்லுவதில்லை. அன்னியர் ஆட்சி என்பதற்காக எந்த ஆட்சியையும் நாம் அழிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் நாம் என்ன சொல்லுகிறோம். முதலாளித் தத்துவமுரை கொண்ட ஆட்சி வேண்டாம், பாடுபடும் மக்கள் அதன் பயனை அடையும் படியான முரைகொண்ட ஆட்சி வேண்டும் என்று தான் சொல்லுகிறோம்?
… … …
நாம் யாரையும் பார்த்து காப்பி அடிக்கிறவர்கள் அல்ல. நமது தகுதிக்கு நிலைமைக்கு ஏற்ற அளவில் இருக்கின்றோம். பலாத்காரத் தன்மையையோ இரகசிய முறை யையோ நாம் அடியோடு வெறுக்கிறோம். நமது கொள்கை நியாயமும், நேர்மையும் ஆனதால் நமக்கு பலாத்காரமும், ரகசியமும் வேண்டாம்.”

தோழர்களே நாம் தைரியமாயும், நேர்மையாயும், ஒற்றுமையாயும், கவலையாயும் வேலை செய்தோமேயானால் நம்ம ஆயுளிலேயே நமது இச்சை பூர்த்தியாவதைக் காணலாம்.”

(குறிப்பு: 07, 08.05.1953 நாள்களில் திருப்பத்தூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா முதலாவது சுயமரியாதை மாநாட்டில் ஆற்றிய உரை.)
(குடி அரசு - சொற்பொழிவு - 14.05.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 111-113 / 116)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக