செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 08:-

(“ருஷிய மதப்புரட்சி” என்ற தலைப்பில் சுசீந்திர போஸ் எழுதியதை வைத்து பெரியார் கருத்துரைத்துள்ளார். வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் தான் மதம் முழுமையாக மறையும் என்பதே கம்யூனிஸ்டுகளின் இயக்கவியல் பொருள்முதல்வாதப் பார்வை. மதம், மடாதிபதிகள், புரோகிதர்கள் ஆகியோரின் புரட்டில் இருந்து அடியோடு விடுபட்டால் ஒழிய விடுதலைக் கிடையாது என்ற பெரியாரின் பார்வை மார்க்சியத்திற்கு மாறானதாகும்)

ருஷியா விடுதலை அடைந்த விதம்

“ருஷியா தேசம் விடுதலை அடைந்த விதத்தைப் பற்றி அமெரிக்காவிலுள்ள திரு.சுசீந்திர போஸ் என்னும் இந்திய கனவான் ஒருவர் எழுதி “ருஷிய மதப்புரட்சி” என்னும் வியாசத்தின் சுருக்கத்தை மற்றொரு புறம் பிரசுரித்திருக்கின்றோம்.

அதை வாசகர்கள் சற்று ஊன்றிப் படித்தால் மத சம்பந்தமாகவும், மதக்குருக்கள், மடாதிபதிகள், புரோகிதர்கள் ஆகியவர்கள் சம்மந்தமாகவும் நாம் 4, 5 வருஷ காலங்களாய் குடிஅரசில் எழுதி வரும் விஷயங்களில் அநேகங்களை ஒத்து இருப்பதைக் காணலாம்.

பழய ருஷியாவில் உள்ள மத நிலைமை மத ஆச்சாரியார்கள் மடாதிபதிகள் ஆகியவர்கள் நிலைமையே தான் இன்றைய நமது இந்தியாவிலும் இருந்து வருகின்றது. ஆகவே ருஷியாவின் அந்த பழய நிலை நீங்கிய பிறகு தான் எப்படி ருஷியா சுவாதீன நாடு ஆவதற்கு இடம் ஏற்பட்டதோ அது போலவே இந்தியாவும் மதக் கட்டுப் பாட்டிலிருந்தும் மத ஆச்சாரியர்கள் மடாதிபதிகள் ஆதிக்கத்தில் இருந்தும் புரோகிதர்கள் புரட்டில் இருந்தும் அடியோடு விடுபட்டால் ஒழிய உண்மையான சுவாதீன நாடாகாது என்பது நமது அபிப்பிராயமாகும்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I- பக்- 67)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக