செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

1) நாத்திக விளக்கம்– தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

30.1.1 பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமே யாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளை நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.

30.1.2 சர்வமும் கடவுள் செயல் என்றும், மனிதச் சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்துவரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி யென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகராகத்தான் வேண்டும்.

30.1.3 நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சி - ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

30.1.4 ஒருவனை ஒருவன் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாத்திக மாகும். கடவுளைச் சரியாக அறியாததே யாகும். அந்த வார்த்தையை உண்டாக்கின வர்களே நல்ல நாத்திகர்க ளாவர். கடவுள் இருந்தால் ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்கவாவது முடியுமா? ஆகவே நாத்திகம், நாத்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளே யாகும். கடவுள் வியாபாரக் காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்தக் கவலையே இருக்க நியாய மில்லை.

30.1.5 மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமே யாகும். மனிதனுக்கு முகத்தில் தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாத்திகமான காரியமே யாகும்.

30.1.6 நாத்திகன் என்று சொன்னால் பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.

30.1.7 கடவுள், மதத் துறையில் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல், அப்படியே புத்தியைப் பிரயோகிக்காமல் முட்டாள் தனமாய் ஒப்புக் கொள்ளுவதுதான் ஆத்திகம். ஆனால் கடவுள், மதச் சம்பந்தமான துறையில் அறிவைச் செலுத்திப் பகுத்தறிவுக்கு எட்டிய வரையில் ஆராய்ச்சி செய்து அதற் கேற்றபடி ஒப்புக் கொள்வது நாத்திகம் ஆகும்.

30.1.8 காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின்படி நடப்பவன் ஆத்திகன்.

30.1.9 நாத்திகம் என்றால் கடவுள், மதச் சம்பந்தப்பட்ட கருத்துக்களைப் பகுத்தறிவு கொண்டு தர்க்க வாதம் செய்வது என்பதுதான் பொருள். அதாவது கடவுளைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை நம்முடைய அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறிவது என்பதுதான்.

30.1.10 நாத்திகன் எந்தக் கருத்தையும் ஆராய்ச்சி செய்து அது அறிவுக்கு நிற்கிறதா என்று பார்ப்பவன். எதையும் தன் சொந்த அறிவுக் கல்லில் உரசிப் பார்த்து ஏற்றுக் கொள்ளுபவன். யார் எதைச் சொன்னாலும் அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் எத்தகைய கருத்தாக இருந்தாலும் தன் சொந்த அறிவையே பிரதானமாகக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் ஆவான்.

30.1.11 நாத்திகர் என்பது தமிழ்ச் சொல் அல்ல. நாத்திகன் என்றால் தன் அறிவுகொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவன். ஆனால் கடவுள் இல்லை என்று கூறுபவன் நாத்திகன் என்றும், ஆத்திகர்கள் என்றால் கடவுள் உண்டு என்று கூறுகிறவர்கள் என்றும் கூறி மக்களை நம்பும்படிச் செய்து விட்டார்கள்.

30.1.12 நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத் தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

30.1.13 நாத்திகன் என்றால் ஞானி, அறிவாளி என்றுதான் பொருள். கடவுள் இல்லை என்பவன் என்பது பொருள் அல்ல. ஞானி என்றால் முனிவர் என்பது அல்ல. ஞானம் உடையவன், அறிவு உடையவன் என்பது பொருள், எவன் ஒருவன் அறிவை உபயோகப்படுத்துகிறானோ அவன் நாத்திகன் என்று கூறப்படு கிறான். ஆத்திகர் என்றால் அறிவில் நம்பிக்கை வைக்காமல் - சாத்திரம், புராணங்கள் முதலியவைகளை அப்படியே ஒப்புக் கொண்டு, ஆராயாமல் நடப்பவர்கள் என்று பொருள்.

30.1.14 நாத்திகர்கள் என்றால் மூட நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுக்காதவர்கள், ஆத்திகர்கள் என்றால் மூட நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்றுதான் பொருள். நாங்கள் கடவுள், மதம், சாத்திரம், அரசியல் முதலியவற்றில் நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல. அவைகள் மூலம் மக்களைத் திருத்த முடியாது என்பதில் தெளிவான நம்பிக்கை உடையவர்கள்.

30.1.15 நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல்களை விரும்புவதால் அவை கடைசியாக நாத்திகமே யாகும். நாத்திகமும் சாத்திர விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது.
30.1.16 கடவுள் இல்லை என்று சொல்பவன் மட்டும் நாத்திக னல்ல. அவனுக்கு முன் பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த ஏற்பாட்டைக் குறை சொல்கிறவனும் நாத்திகனே யாவான்.

நாத்திகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக