சனி, 29 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 29:-


ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு - தந்தை பெரியார்

(ஜமீன்தாரர்கள் இந்த ஆட்சி முறைக்குத் தூண்களாக இருந்து வருகிறார்கள், அவர்களை இல்லாமலாக்க வேண்டும் என்று ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டைப் பெரியார் 1933ஆம் ஆண்டுக் கூட்டினார். இதே போல் முதலாளிகள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலைச் சொந்தக்கார்கள் அல்லாதார் மகாநாடு, பணக்காரர்கள் அல்லாதார் மாநாடு போன்று சமூகத்திற்குத் துன்பதை அளிக்கின்றவர்களை அல்லாதார் மாநாடுகளைக் கூட்டி பொதுமக்களுக்கு அவர்களின் கொடுமைகளை விளக்கிக்காட்டி அவைகளை ஒழிக்கச் செய்ய வேண்டியது நமது கடமை என்கிறார் பெரியார்.

ஆதிக்கம் செய்பவர்களை இது போன்று மாநாட்டின் மூலம் நீக்கிட முடியுமா? அவர்களின் வேரை அறிந்து அந்த வேரை அழித்தால்தான் அவர்கள் இல்லாது போவார்கள். அவர்கள் மீதான வெறுப்பைக் கற்பிப்பதால் மட்டும் அவர்கள் அழிந்துவிட மாட்டார்கள். சர்க்காருக்கு இடையே காணப்படும் இந்த ஜமீனை நீக்கி. சர்க்கார் நேராய் செயற்பட்டால் 2 கோடி ரூபாய் இலாபம் ஏற்படும் என்கிறார் பெரியர். அந்தப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு எவ்வளவு பயன்களை ஏற்படுத்தலாம் என்று ஆதங்கப்படுகிறார்.

வர்க்க சமூகத்தல் அரசு ஒரு வர்க்கத்தின் சார்பாகத்தான் செயற்படுகிறது. அந்த வர்க்க செயற்பாட்டிற்காகத்தான் 2 கோடி போன்று பல கோடிகளைச் செலவளிக்கப்படுகிறது. பணக்காரர்கள் ஆன்மீகத்திற்கு, அதாவது கோவில், குளம், கும்பாபிசேகம் போன்ற செலவுகளைச் செய்வது தமது வர்க்க நலனுக்காகவே. மதப்பிடிப்பு என்பது உழைக்கும் மக்களின் எதிர்புணர்வை மழுங்கடிக்கிறது. அதற்காகத்தான் பணக்கார வர்க்கம் அதற்குச் செலவு செய்கிறது.

பலனடைந்த பணக்கார வர்க்கமும் அரசும் கோடிகளைத் தெரிந்தே செலவிடுகிறது. இதற்குச் செய்யும் செலவை கையில் வைத்திருந்தாலும் இந்த வர்க்க அரசு உழைக்கும் மக்களுக்குத் தேவையானதை செய்யாது என்பதே உண்மையாகும். அரசின் வர்க்கத் தன்மையைப் பெரியார் புரிந்து கொள்ளவில்லை அதனால் தான், அரசு மக்களுக்கு நன்மைகள் அதிகம் செய்யாது இருப்பதற்குக் காரணம் பணப்பற்றாகுறை என்று கருதுகிறார். சமூகத் தீங்கை நீக்க வர்க்க புரிதலும், வர்க்க அரசியலும் அவசியம் தேவை.)

தந்தை பெரியார்:-

“நாம் உலக பொதுஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில் தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங் களில் இம்மாதிரி மகாநாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்பார்க்கி றேன். உதாரணமாக லேவாதேவிக்கார்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளி கள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகா நாடு, வீடுகளின் சொந்தக் காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லா தார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக் காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச்செய்ய வேண் டியது நமது கடமையாகும்.

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த தன்மைகளால், எந்த எந்த மனிதக் கூட்டங்களால் மனிதசமூகத்திற்கு இடஞ்சல்களும், சமத்துவத் திற்கும், முற்போக்குகளுக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ அவைகளெல்லாம் அழிந் தொழிந்து என்றும் தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படி செய்ய வேண்டியது தான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லக்ஷியமாகும்.

மனித சமூகத்துக்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான் களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால் தரித்திரவான்களே இருக்க மாட்டார்கள். மேல்வகுப்பார் இல்லாவிட்டால் கீழ்வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால் தான் இம்மாதிரி அல்லாதவர்கள் மகாநாடு கூட்ட வேண்டு மென்கின்றோம்.
… … …

பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரண மாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படு பவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்துவருகின்றவர்களாவார்கள். பார்ப்பனர் களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர் களும், உலக மக்கள் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாயிருப்பவர்களுமா வார்கள்.
… … …
சாதாரணமாக ஜமீன் என்கின்ற மேற்கண்ட தன்மை, நாட்டில் அடியோடு இல்லாமல் இந்த வாபங்களையும் அதாவது இந்த 2 கோடி ரூபாய் களையும் சர்க்காரே நேராய் அடைவதாய் இருந்தால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுத்தலாம் என்பதையும் யோசிக்க வேண்டுகிறேன்.

ஆதலால் மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அது போலவேதான் ஜமீன்தாரன் குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாதென்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம்”
(குடிஅரசு – சொற்பொழிவு -27-08-1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 128-130 / 133-134)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக