திங்கள், 17 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 15:-


சமதர்ம அறிக்கை

(ஜெர்மன், இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளைவிட ரஷ்யாவில் தாங்க முடியாத கொடுமை இருந்தபடியால் சோஷலிசம் ஏற்பட்டதாக பெரியார் குறிப்பிடுகிறார். இது உண்மைதான் ஆனால் அந்தக் கொடுமையை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடே அங்குள்ள மக்கள் விழிப்படைந்து போராடி வெற்றி பெற்றதற்கு முதன்மை காரணமாகிறது. பெரியார் 1931லேயே அறிக்கை வெளியிட்டிருப்பதே ஒரு சிறப்பு தான். பெரியார் பற்றி விமர்சனம் என்பது இதனைக் கடந்துதான் வைக்கப்படுகிறது. விஞ்ஞான கம்யூனிசத்தைப் பற்றிய இன்றைய தெளிவு அன்று நம் நாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதில் வேறுபாடு இருந்தாலும் கம்யூனிசத் தத்துவம் அடிப்படை ஒன்று தான் என்று பெரியார் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் வர்க்கப் போராட்டத்திற்கு முன்பு வர்ணப் போராட்டத்தை பெரியார் முன்வைப்பது வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கு பெரும் தடையாகவே இருக்கிறது. அதனால் வர்ணப் போராட்டமா? வர்க்கப் போரட்டமா? என்பது பற்றி ஆராய்ந்து சரியான முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.)

முகவுரை

“சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங்களைப்பற்றியும், கொள்கைகளைப்பற்றியும் வெளியில் எடுத்து மக்களுக்குத் தெரியும்படியாக மகாநாடுகள் மூலமும் அறிக்கை மூலமும் வெளிப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாய் காணப்படும் காலமே இன்றைக்கு சுமார் 80, 90 வருஷங்களுக்கு முன்பு என்று தெரிகின்றது. அதாவது 1847 ம் வருஷத்திலேயே லண்டன் மாநகரத்தில் உலகத்திலுள்ள சமதர்மவாதிகளுடைய மகாநாடு (காங்கிரஸ்) ஒன்று நடந்திருப்பதாகவும், அதன் பயனாய் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. ஆனால் அதை சீக்கிரத்தில் கையாளப்படவும் அனுபவத்திற் கொண்டு வரவும் முயற்சித்த நாடு ரஷியாவாக ஏற்பட்டு விட்டது.

இது சம்பந்தமாக நமக்குக் கிடைத்த ஒரு அறிக்கை சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில் முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மனியர்களாயிருந்தாலும், அதற்காக மகாநாடு கூடினது லண்டன் பட்டணமாய் இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது பிரான்சு தேசமாயிருந்தாலும், அது முதல் முதல் அனுபவத்தில் கொண்டுவர முயற்சிக்க வேண்டிய இடம் ரஷியாவாகவே ஏற்பட்டுவிட்டது சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் அந்தப்படி ஏற்படு வதற்கு நியாயம் இல்லாமலில்லை.

என்ன நியாயமென்று வாசகர்கள் கேட்பார்களேயானால் அதற்கு நமது சமாதானமானது எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்கு தான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறு கொண்டு எழவும் சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.

எனவே இந்த நியாயப்படிப் பார்ப்போமானால் உலக அரசாங்கங் களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்கக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்மமுறை அனுப் வத்திற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால் அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியா தேசத்தை விட இந்தியாவுக்கே முதன் முதலாக ஏற்பட்டு இருக்கவேண்டியதாகும். ஆனால் அந்தப்படி ஏற் படாமல் இருப்பதற்கு இங்கு அனேகவித கட்சிகள் நடைபெற்று வந்திருப்ப தாலும், சூட்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு உலக ஞானம், சுயமரியாதையுணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் இல்லாமல் காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோடி சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், அதே சூட்சிக்காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச் செய்து வந்ததாலும் உலகில் சமதர்ம உணர்ச்சி முதன் முதல் இந்தியா விலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி ரஷியாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.

ஆன போதிலும் கூட இப்போது உலகில் மற்றும் எல்லாப் பாகங் களிலும் ஏற்பட்டு விட்டதின் காரணமாய் இந்தியாவிலும் ஏற்பட வேண்டியது தவிற்க முடியாத அவசியாய் போய்விட்டதால் இங்கும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார்- கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிக மாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை.”
(குடிஅரசு- 04-10-1931)

“இவ்வறிக்கை எழுத ஆரம்பித்த் காலத்தில் இருந்து இதுவரை உலக நிலைமையில் அதிசயிக்கத்தக்கப் பல மாறுதல்கள் எவ்வளவுதான் ஏற்பட்டு இருந்தாலும் அவ்வறிக்கையின் தத்துவமானது இன்றைய நிலைமைக்கும் மிக்கப் பொருத்தமானதாகவே இருந்து வருவது அவ்வறிக்கையின் விசேஷத்திற்கு ஒரு காரணமாகும்.

சமதர்மவாதிகள் தங்களுடைய வேலைத் திட்டங்களைக் கால தேசவர்த்தமானங்களுக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது சரியானாலும சமதர்மக் கொள்கை என்பதில் எந்தக் காலத்திற்கும் எந்தத் தேசத்திற்கும் இந்த அறிக்கையில் இருந்து சிறிதுகூட மாறுபட வேண்டிய அவசியம் ஏற்படாதபடி இது அமைந்திருக்கின்றனது.”
(குடிஅரசு- 11-10-1931)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I - பக்-192-194—196-197)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக