வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

ஆஸ்திகம் – நாஸ்திகம் – தந்தை பெரியார்


(பணம்படைத்தவர்களுக்காக ஏற்பட்டதே அரசு, காவல் நிலையம், நீதி மன்றம், சிறைசாலை போன்றவை. மதமும் பணம்படைத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கு ஏற்பட்டதே ஆகும். பெரியாரின் பகுத்தறிவுப் பார்வைக்கு மதத்தின் வர்க்கத் தன்மை புரிந்திடவில்லை. மார்க்சியம் மதத்தின் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஆன்மீக உணர்வு என்பது பிறர் சொல்லிக் கொடுத்துவருவதில்லை. அதற்கான புறநிலைமை இருக்கிறது. இந்த நிலைமையின் விளக்கத்தோடே மார்க்சியம் மதத்தை விமர்சிக்கிறது.)

“முடிவாக ஆஸ்திகம் நாஸ்திகத்தைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது ஒரு பயனற்ற விஷயம். ஏனெனில் ஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள் பழக்க வழக்கங்களால் - பிறர் சொல்லிக் கொடுப்பதால் - சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய, ஓர் இயற்கை உணர்ச்சி ஆகியவைகளைப்போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணம் அல்ல. அதைப்பற்றி மனிதன் கவலைப்பட வேண்டியதே இல்லை. அது இன்று ஓர் ஆராய்ச்சி விஷயமாகி நாகரிக விஷயமாகவும் பேசப்பட்டு வருகின்றது. மனிதனுக்குக் கட்டும், காவலும், சட்டமும், போலீசுமாய்த்தான் இருக்கின்றனவே ஒழிய - கடவுளோ, நரகமோ, சாஸ்திரமோ, ஒழுக்கமோ கட்டிக் காப்பாற்றி விடவில்லை . அனுபவத்திலும் எவனும் அவற்றின் மீது எவ்விதப் பொறுப்பையும் சுமத்துவதும் இல்லை.

ஆதலால், ஆஸ்தீக நாஸ்திகம் என்பது ஒரு பயனற்ற பிரச்சனையாகும். மற்றும் அது அவனவனுடைய சொந்த புத்தி, யோசனையைப் பொறுத்ததாகும்.

ஆதலால், நமது வாழ்வில் ஏற்படவேண்டிய இன்ப, துன்பங்களுக்கும் ஆஸ்திக – நாஸ்திகத்தைக் கொண்டுவந்து குறுக்கே போட்டுக்கொண்டு யாரும் கஷ்டப்படவேண்டியதில்லை.

நம்மைப் பொறுத்தவரை அளவில் ஆஸ்திகத்தில் பிரவேசிக்கின்றோம் என்று நினைப்பீர்களானால், வாழ்க்கையின் நலங்களைக் கடவுளின் மீது பொறுப்பேற்றுவதும், கடவுளுக்காகச் செல்வங்களை மக்கள் - வாழ்க்கைக் குரிய பொருள்களைப் பாழாக்குவதையும் பொறுத்த அளவில்தான் பிரவேசிக்கின்றோம்.

மற்றபடி எவன் எத்தனைக் கடவுளை எந்தவிதமாக நினைத்துக் கொண்டாலும், வணங்கினாலும், அவற்றோடு பேசினாலும் அதுவே ஆய்விட்டாலும் நமக்கு அக்கறையில்லை.

உலகத்தைப் பொது என்றும், உலகப் பொருள், போக போக்கியங்கள் யாவருக்கும் சமம் என்றும் எண்ணவேண்டும். இதற்குக் கடவுள் குறுக்கிடாமல் இருந்தால் கடவுளைப்பற்றிய வேலை நமக்கு இல்லை. அதைப்பற்றிய கவலையும் இல்லை. ஆகையால் அதை ஒரு பெரிய பிரச்சனையாக வைத்துக்கொண்டு எவரும் கஷ்டப்பட வேண்டியதில்லை.”
(7-10-1934இல் புதுக்கோட்டையில் வரவேற்புக் கூட்டத்தல் சொற்பொழிவு,
"பகுத்தறிவு”, 14-10-1934)
(ஈ.வெ.ரா. சிந்தனைகள் – 2009- வே.ஆனைமுத்து, இரண்டாம் வரிசை- பக்கம்- 4276-4277)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக